குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி மக்கள் சீரற்ற குடிநீர் விநியோகத்தை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.
Update: 2024-06-13 04:09 GMT
கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி கீழ் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் கூத்தக்குடி அருகே நேற்று காலை 9.30 மணியளவில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பேரில் காலை 10 மணியளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.