போதிய இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு போதிய இருக்கைகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.;
Update: 2024-01-30 08:25 GMT
தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர். அந்த வகையில் இன்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு போதிய இருக்கை வசதி, குடிநீர் வசதிகள் ஏதும் செய்து தராததால் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அடிப்படை வசதிகள் இல்லாத போது, பொதுமக்கள் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் மனு அளித்துச் சென்றனர்.