வாகன விபத்தில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு

ராஜபாளையத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-03 01:30 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டியை சேர்ந்தவர் நடராஜன். 53 வயதான இவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை இருசக்கர வாகனத்தில் தனது மகன் முகேஷை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் சொக்கலிங்கபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது குறுக்கே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை நிறுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த வாகனத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இவரது மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த நடராஜனை அருகே இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூர்ச்சையாகி இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் நடராஜன் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News