"வடிகால்வாய் ஓரம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி"
பருவ மழையின்போது, மண் அரிப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிகால்வாய் ஓரம் சாலை சேதமடைந்து, பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
Update: 2024-01-30 11:56 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பெரிய மேட்டுத் தெருவிற்கு செல்லும் பிரதான சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு பருவ மழையின்போது, மண் அரிப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிகால்வாய் ஓரம் சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது தடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரி பெரிய மேட்டுத்தெரு பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்."