புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.;

Update: 2024-04-24 01:22 GMT

சித்திரை திருவிழா

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள் கொடி கயிறு பொட்டி பல்லாக்கில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

14 ம் தேதி தொடங்கி அடுத்து வந்த 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் திருவிழா கொண்டாடப்பட்டது. வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் சப்பரம், பூச் சப்பரம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இன்று மாலை நடைபெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோயில் வளாகத்தை சுற்றி உள்ள பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. இன்று பிற்பகலில் கோயிலினுள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

4 மணிக்கு பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்கள் படை சூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு நடந்த வழிபாட்டுக்கு பிறகு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது அவ்விடத்தை சுற்றி நின்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜபாளையம், புதுப்பட்டி, தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், ஆவரம்பட்டி, ஒத்தப்பட்டி, கோதை நாச்சியார்புரம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். ஆண், பெண் காவலர்கள், தீ அணைப்பு துறையினர், ஊர்காவல் படையினர் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சங்கரன் கோயில் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News