ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்
திருச்சியில் ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றன.
Update: 2024-01-29 09:12 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65). இவர் எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 23 ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு ஜெயங்கொண்டத்தில் நடந்த அவருடைய மகன் நிச்சயதார்த்தத்துக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 2,500 கிராம் வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு ஓடி விட்டனர். பிறகு ஊரிலிருந்து வீடு திரும்பிய ராஜாராம், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டும், நகைகள் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டும் அதிர்ச்சி அடைந்தார். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.