கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள் கைது

கோவில்பட்டியில் வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து ,அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ;

Update: 2024-03-07 00:48 GMT

கைது 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி தியேட்டர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

Advertisement

இதில்,  கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் சரவணக்குமார் (24) மற்றும் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் போஸ்குமார் (20) ஆகியோர் என்பதும்,  அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சரவணகுமார் மற்றும் போஸ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணக்குமார் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 7 வழக்குகளும், கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 8 வழக்குகளும், போஸ்குமார் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மதுரை  குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 5 வழக்குகளும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News