சேலம் : பஞ்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சேலம் நெத்திமேட்டில் உள்ள பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

Update: 2024-04-23 02:16 GMT

தீயை அணைக்கும் பணி

சேலம் நெத்திமேடு இட்டேரி ரோட்டைச் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 40). இவர் அதே பகுதியில் பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அரவை எந்திர செயல்பாட்டிற்காக டன் கணக்கில் விறகுகளை அங்கு வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீ விபத்து குறித்து ஜோதிமணிக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் விறகுகளில் ஏற்பட்ட தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தனர்.

தீ விபத்தால் தொழிற்சாலையில் இருந்த பஞ்சு, விறகு உள்ளிட்டவை எரிந்து சேதமாயின. அதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News