ரூ.21 லட்சம் முறைகேடு - மாஜி பிடிஓவுக்கு போலீசார் வலை

சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ரூ.21 லட்சம் முறைகேடு செய்த மாஜி பிடிஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-07 08:09 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிராஜூதீன் (60). இவர், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பிடிஓ ராஜா என்பவர், நிலவாரப்பட்டி‌ ஊராட்சியில் 42 மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அலுவலகத்திற்கு தொடர்பின்றி தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளார்.அதன்மூலம் அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டிய ரூ.21 லட்சத்தை வசூல் செய்து கருவூலத்தில் செலுத்தாமல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறியிருந்தார்.

இப்புகார் பற்றி டிஎஸ்பி முனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாஜி பிடிஓ ராஜா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மாஜி பிடிஓ ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News