வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
Update: 2024-01-14 05:13 GMT
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அங்கு பணியாற்ற கூடிய அலுவலர்கள் பாரம்பரிய வேஷ்டி மற்றும் சேலைகளை அணிந்து வருகை தந்திருந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்து படையல் இட்டு கோப்புகளுக்கு சூடம் ஏற்றி காண்பித்து பொங்கலோ பொங்கல் எனக் கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பெண் அலுவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக மியூசிக்கல் சேர் போட்டியில் ஏராளமான பெண் அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டி போட்டுக் கொண்டு நாற்காலியில் இடம் பிடித்து சுவாரசியமாக விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.