பைக் விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
தாழக்குடி அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-02-07 05:10 GMT
குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் மகன் அபிஜித் (14). இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் செல்வசேகரன் (16), சுரேஸ் என்பவர் மகன் ஆகாஷ் (16) ஆகியோரும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு அபிஜித், செல்வ சேகரன், ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் அதே ஊரை சேர்ந்த ஒருவருடைய மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு இறச்சகுளத்திற்கு பொருள்கள் வாங்க சென்றனர். இதில் அபிஜித் பின்னால் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது இதில் மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அபிஜித் உயிரிழந்தார். நண்பர்கள் இரண்டு பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.