சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது

சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-10 10:31 GMT
பைல் படம்

சேலம் அம்மாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 59). டெல்லியை சேர்ந்த இவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி பாபுலால் என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் வசித்து வந்தார். டெல்லியில் உள்ள பூர்வீக சொத்தை சரோஜா விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ.1¼ கோடியே வைத்து சேலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 2-ந் தேதி சேலம் சங்கர்நகரில் உள்ள வீட்டிற்கு வந்த சரோஜா 7-ந் தேதி அம்மாப்பேட்டை வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த 63 பவுன் நகை, ரூ.65 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டு சேலைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் வேலை செய்த பெண்ணான வள்ளி (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வள்ளி தான் வீட்டில் அதிகளவு பணம் இருப்பதாக கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்து, கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்தது தெரியவந்துள்ளது.

அதேசமயம் வீட்டில் இருந்து கொள்ளையடித்த பொருட்களை எடுத்து சென்ற கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டு சேலை கிடந்தது. இதனால் வள்ளியின் கூட்டாளிகள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய நபர்கள் 2 பேர் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களிடம் தான் கொள்ளையடித்த நகை, பணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கும்பல் கடந்த ஒரு மாதமாக சரோஜாவின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News