மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மந்த கதியில் விரிவாக்கப்பணி

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் விரிவாக்கப்  பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-28 03:52 GMT

 ரயில் நிலைய விரிவாக்கப்  பணிகள்

மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகள் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய சந்திப்பு விரிவாக்க பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய நிலையில் மிகவும் தாமதமாக பணிகள் நடைபெற்று வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக இத்துடன் சேர்த்து துவக்கப்பட்ட மற்ற ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் எழுப்பப்பட்ட நிலையில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் மட்டும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை கடந்து ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதும், ரயிலில் இருந்து இறங்கி வருபவர்கள் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதும் சவால் நிறைந்த பயணமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளை கடந்து வரும் பொழுது தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.  அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் மாற்று வழியில் சென்றால் அதிக தூரம்  சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News