வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது.

Update: 2023-12-08 07:25 GMT

மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் சென்னை அறிவுரைக்கு இணங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2024 பணியானது 27.10.2023 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டு வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல் /நீக்கல்/ திருத்தம் ஆகிய பணிகளுக்காக படிவங்களை பெற்று வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்த சிறப்பு முகாம்கள் 04.11.2023, 05.11.203, 25.11.2023, மற்றும் 26.11.2023 ஆகிய தினங்களில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் / பாலிடெக்னிக் /தொழில்பயிற்சி நிலையங்களில் 24.11.2023 அன்று இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.

மேலும் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வயது வாக்காளர்களை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 24.11.2023 அன்று முகாம் நடைபெற்ற பொறியியல்/ பாலிடெக்னிக்/ தொழிற்பயிற்சி நிலையங்கள் தவிர்த்து பிற அனைத்து கல்லூரிகளில் சிறப்பு முகாமானது 08.12.2023 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம், மாவட்ட நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், அனைத்து கல்லூரிகளுக்கும் வருகை தந்து, அவர்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்களை பெற்று, வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

எனவே 1.1.2024 அன்று 18 வயது நிறைவடைந்த/நிறைவடையவுள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்கள் முகவரி, வயதுக்கான அடையாள அட்டை (குடும்ப அட்டை, ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்று) மற்றும் கடவுசீட்டு அளவிலான வண்ண புகைப்படத்துடன் தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் https://voters.eci.gov.in இணைய தளத்தில் அல்லது வாக்காளர் உதவி செயலி (Voter help Line app) ஆகியவற்றின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதிதெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News