ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மண்டி தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 20ஆம் தேதி மங்கல இசை, வேதபாரயணம் விநாயகர் பூஜையுடன் அஷ்ட லட்சுமி, நவகிரக ஓமம் பூர்ணாஷூதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜையும் 21ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் 22 ஆம் தேதி நான்காம் கால யாக பூஜை உடன் மங்கல இசை யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஓமங்கள் தத்துவார்ச்சனை மகாபூர்ணாஹூதி நடைபெற்று கலச புறப்பாடு துவங்கியது.
பின்னர், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலய விமானத்திற்கு கும்ப கலசங்கள் இருந்த புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது மேலும் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், சுப்பிரமணியர் ஸ்ரீ லட்சுமண அனுமன் சமேத சீதாராமர் மற்றும் நவ கிரகங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.