மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மாணவர்கள் தீபங்கள் ஏந்தி புகழஞ்சலி
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு தேவையான முக்கிய குணங்கள் எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி-மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மாணவர்கள் கையில் தீபங்கள் ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர்.
Update: 2024-02-05 08:52 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளியான யூரோ கிட்ஸ் பள்ளியில் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில் போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்கு வெற்றி பெறத் தேவையான குண நலன்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாட்சா சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அயோத்தி தமிழ் திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி, சின்னத்திரை நடிகரும் சமூக ஆர்வலருமான கேபிஒய் பாலா, டி எஸ் பி கலைக்கதிரவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மறைந்த நடிகர் விஜயகாந்தின் நினைவை போற்றும் விதமாக அவரின் திருவுருவ படத்தை வைத்து அவரது திரைப்பட பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடி கையில் தீபம் ஏந்தி புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் இணைந்து உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நாடகத்தை காட்சிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். உயிர் காக்கும் அவசர ஊர்தி 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஊழியர்கள், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் சுதா ஆகியோரின் சேவையை பாராட்டி இயக்குனர் மந்திரமூர்த்தி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.