அரசுப்பள்ளியில் மாணவர்கள் மோதல்
கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பள்ளியில் இடைவேளையின் போது பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவரை வணிகவியல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிவியல் பாடப் பிரிவு மாணவர் தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது வணிகவியல் படிக்கும் மாணவரின் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து அறிவியல் பாடப் பிரிவு மாணவரை சரமாரியாக தாக்கி மூக்கை உடைத்தனர். இதனை கண்ட சக மாணவர்கள் சத்தம் போட்டனர். உடனே ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவர்களை விலக்கிவிட்டு காயம் பட்ட மாணவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.