ரயில்வே சுரங்கபாதையில் சிக்கி பழுதான மினிபேருந்து

ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி பழுதான மினி பேருந்தில் இருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-12-13 09:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள சித்தாலம்புத்தூர் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி மினி பேருந்து பழுதடைந்தது. பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகே சிவகாசி சாலையில் இருந்து அச்சம்தவிழ்த்தான் செல்லும் வழியில் அத்திகுளம் கண்மாய் கரையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சித்தாலம்புத்தூர், அத்திகுளம், அச்சம்தவிழ்த்தான், நாச்சியார்கோவில், அணைத்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கண்மாய் கரையில் சுரங்கப்பாதை அமைந்துள்ளதால் எப்போதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியே இருக்கிறது. இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் வசதி இருந்தும் பயன்படுத்தப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழை காரணமாக நேற்று இரவு சுரங்கப்பாதையில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இன்று காலை இவ்வழியே சென்ற இரு பணியாளர் வாகனங்கள் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி பழுதானது. இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோடாங்கிபட்டியை நோக்கி சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து சென்றது. சித்தாளம்பத்தூர் ரயில்வே சுரங்க பாதையில் மினி பேருந்து சென்ற போது மழை நீரில் சிக்கி பழுதடைந்தது. இதனால் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் தவித்தனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News