பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - மர்ம நபர்களுக்கு போலிசார் வலை விச்சு !
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் இருந்து நகையை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-03-29 04:29 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனி. இவருடைய மனைவி அமுதா (வயது 42). இவர் நேற்று மாலை கெங்கவல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கெங்கவல்லி சிவன் கோவில் அருகே உள்ள வள்ளலார் மடம் அருகில் திடீரென்று முகமூடி அணிந்து கொண்டு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற அமுதாவின் கழுத்தில் இருந்து நகையை பறிக்க முயற்சி செய்தனர். உடனடியாக அமுதா நகையை கையில் பிடித்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். சத்தம் போட்டவுடன் அவர்கள் நகையை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அமுதா கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார் அந்த பகுதியில் உள்ளகண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவிசாரித்து வருகின்றனர்.