ஆடு திருடன் முயன்ற போது தடுத்த பெரியப்பாவை கொன்ற சிறுவன்

செங்கல்பட்டு மாவட்டம், நெசப்பாக்கம் பகுதியில் ஆடுதிருடியதை கண்டித்த பெரியப்பாவை கொன்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-11 09:35 GMT

கைது

செய்யூர் அருகே உள்ள நெசப்பாக்கம் கிராமம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன், 52. இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்கையில் கட்டிவிட்டு, வீட்டின் வெளியே உறங்கி உள்ளார். நேற்று காலை 7:30 மணிக்கு, லோகநாதன் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் ஏற்பட்டு, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து, லோகநாதனின் உறவினர்கள் செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குபதிந்து விசாரணை செய்தனர். சந்தேகத்தின்படி, லோகநாதனின் தம்பி பூபாலன் என்பவரின் 16 வயது மகனிடம் விசாரணை செய்தனர். அப்போது, சிறுவன் தான் கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு, மது போதையில் ஆடு திருட சென்ற சிறுவன், லோகநாதன் ஆடுகளை அடைத்து வைத்திருந்த கொட்டகைக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது, ஆடுகள் கத்தியதால், சத்தம் கேட்டு எழுந்த லோகநாதன், ஆடு திருட வந்த தன் தம்பி மகனை கண்டு, அவனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 16 வயது சிறுவன், தன் பெரியப்பா லோகநாதனை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பி சென்றுள்ளான். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, செய்யூர் போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News