தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்ததால் பரபரப்பு....

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு 12,13,14 வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தல் புறக்கணிப்பு.;

Update: 2024-04-06 09:24 GMT

தேர்தல் புறக்கணிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பதாகை (பிளக்ஸ் பேனர்) வைத்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கேட்டு கடை பகுதியில் உள்ள தாலுக்கா அலுவலகம் அருகே 10 ஆண்டுகளாக 100 க்கும் மேற்பட்டோர் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். நாங்கள் எடப்பாடி நகராட்சிக்கு வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தி வருகிறோம்  இங்கு கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல் வீட்டின் அருகிலேயே கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

Advertisement

இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது தெருவிளக்கு இல்லாத காரணத்தால் விஷப்பாம்புகள் மற்றும் பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இரவு நேரங்களில் வெளிய வர முடியாமல் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பல பலமுறை முறையிட்டும் உரிய தீர்வு அளிக்கப்படாத நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை12,13,14, வார்டு பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் புறக்கணிக்க போவதாக கூறி, எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பதாகைகளுடன் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை குடியிருப்பு வாசிகள் திடீரென புறக்கணிக்க போவதாக விளம்பர பலகை வைத்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News