விநாயகர் சிலையை அகற்ற திண்டிவனம் நகராட்சி நோட்டீஸ்

திண்டிவனம் 24வது வார்டில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Update: 2023-10-21 05:32 GMT

விநாயகர் சிலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட மகாத்மாகாந்தி நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் மகாத்மாகாந்தி நகர் பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபட அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, அந்த பகுதியில் உள்ள பொது இடத்தில் விநாயகர் சிலை அமைப்பதற்காக திண்ணை அமைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து வார்டு கவுன்சிலர் ராம்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் தமிழ் செல்வி, நகராட்சி தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் ஆகியோரிடம் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டுகோரிக்கை மனுகொடுத்தனர். தொடர்ந்து விநாயகர் சிலை அமைத்து கடந்த 30 நாட்களாக பூஜை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விநாயகர் சிலை அருகில் திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் இங்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை வருகிற 7 தினங்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுடன், விநாயகர் சிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News