TNPSC Group I முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC Group I முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.;

Update: 2025-03-05 14:32 GMT
சிவகங்கை மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஆண்டுத்திட்ட அட்டவனையில் TNPSC Group I முதல்நிலைத் தேர்விற்கு அறிவிக்கை வருகின்ற 01.04.2025 அன்று வெளியிடப்படவுள்ளது எனவும், அதற்கான தேர்வு வருகின்ற 15.06.2025 அன்று நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, TNPSC Group I முதல்நிலைத் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நாளையதினம் (06.03.2025) முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி, வகுப்புகளில் அதிகளவிலான பாடவாரியான பயிற்சித் தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான பொது மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நுாலகத்தில், இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கற்றல் இணையதளத்தையும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News