வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைகளில் தக்காளி விலை சரிவு

சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

Update: 2024-04-21 01:57 GMT

தக்காளி 

சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி என 13 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைகளுக்கு மேச்சேரி, ஓமலூர் பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் தக்காளி விலை குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மழைக்காலங்களில் ஒரு கிலோ ரூ.200 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலையில் தக்காளி விற்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல், கத்தரிக்காய், சுரைக்காய், வெண்டைக்காய் விலையும் சரிந்து விற்பனை செய்யப்படுகிறது..

Tags:    

Similar News