மீனாட்சியம்மன் கோயிலில் சேதமான மண்டபம் எப்போது சீரமைக்கப்படும் ?.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபம் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-02-02 03:00 GMT

உயர்நீதிமன்ற மதுரை கிளை 

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்த ராயர் மண்டபம் சேதம் அடைந்தது. இந்த மண்டபம் மிகவும் பழமையானது. ஏராளமான கலை சிற்பங்கள் இருந்தன. எனவே தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபத்தை பழமை மாறாமல் புனரமைக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கை தொடர்பாக மேலும் பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி தெடர்ந்து நடைபெற்று வருகிறது. மண்டபத்தில் இருந்த பழையகற்கள் போலவே புதிய தூண்கள் வடிவமைக்கப்படுகிறது. இந்த கல் தூண்களுக்காக நாமக்கல் மாவட்டம் குவாரிகளில் இருந்து கற்கள், மதுரை செங்குளம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தூண்கள் வடிவமைக்கப்படுகிறது'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், ''தீ விபத்து நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணியில் தற்போதையை நிலை என்ன? இன்னும் எவ்வளவு நாட்களில் இந்தப் பணிகள் முடியும் என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News