தாரமங்கலம் அருகே கணவன் விஷம் குடித்த துக்கத்தில் மனைவி தற்கொலை

தாரமங்கலம் அருகே கணவன் விஷம் குடித்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிகிச்சையில் இருந்த கணவரும் இறந்தார்.

Update: 2024-06-23 15:20 GMT

தற்கொலை செய்து கொண்ட தம்பதி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 22). இவர் தோப்பூர் பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். பூபாலன் கடந்த ஓராண்டுக்கு முன்பு பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த உறவினர் மகளான மேகலா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பூபாலன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. ஆஸ்பத்திரியில் கணவரை உடன் இருந்து கவனித்து வந்த மேகலா நேற்று மாலை திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது பழைய புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே உள்ள ஒரு மரத்தில் மேகலா தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ஆஸ்பத்திரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் காலை கணவர் பூபாலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News