மின்வாரிய ஊழியரை தாக்கியதால் பணி புறக்கணிப்பு போராட்டம்

உசிலம்பட்டி அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியதை கண்டித்து உசிலம்பட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-02-21 08:39 GMT

போராட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டியில் மாயி என்பவர் வீட்டில் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயர் மேன்கள் குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சென்று மின்சாரத்தை துண்டித்துவந்துள்ளனர். இதனை அறிந்த மாயி மற்றும் அவரது மகன் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் இதே கிராமத்தில் வசித்து வரும் வயர் மேன் குமார் என்பவரை அவரது வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து குமார் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உசிலம்பட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினரை கண்டித்தும் புதுப்பட்டியைச் சேர்ந்த மாயி மற்றும் அவர் மகன் சூரிய பிரகாஷ் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி இன்று பணி செய்யாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் மின்வாரிய அலுவலகத்தில் மின் வேலை விஷயமாக வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக தாக்கியவர்களை கைது செய்யும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News