மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு பகுதியில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-25 14:46 GMT

கைதானவர்

செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, செங்கல்பட்டு மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மதுராந்தகம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து ஆத்துார் நோக்கி வந்த போர்டு இகோ ஸ்போர்ட் காரை, போலீசார் மடக்கினர். அப்போது, காரில் வந்த வாலிபர் தப்பியோடினார். காரை சோதனை செய்தபோது, 30 அட்டைப் பெட்டிகளில், 80,000 ரூபாய் மதிப்புள்ள, 2,840 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து, காரை ஓட்டிவந்த விழுப்புரம் மாவட்டம், வானுார் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த குமாரி, 52, என்பவருக்காக, புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்ததும், தப்பியோடியது சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், 30, என்பதும் தெரிய வந்தது.

பின், வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று கார்த்திக் மற்றும் குமாரி ஆகிய இருவரையும் கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், குமாரியை சென்னை புழல் சிறையிலும், கார்த்திக்கை மதுராந்தகம் கிளைச் சிறையிலும் அடைத்து, தப்பியோடிய தங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News