கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தற்கொலை ? உறவினர்கள் சாலை மறியல்

Update: 2023-07-10 11:46 GMT

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த கஸ்தூரிப்பட்டியை சேர்ந்தவர் மணிவாசகம். அவரது மனைவி விஜயா. அவர்களுக்கு, அகிலா (23), இளவரசி (21), என இரண்டு மகள்களும், அபினேஷ் என்கிற மகனும் உள்ளனர். அதில், இளவரசிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இளவரசிக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் முறையில் உள்ள, திருமணமான வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது மற்றவர்களுக்கு தெரிய வந்ததும், ஊர் பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அனுப்பி உள்ளனர். இதற்கிடையில், அந்த வாலிபரின் மனைவி மற்றும் தந்தை ஆகிய இருவரும், கடந்த, 6ம் தேதி இளவரசியை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனால் மனம் உடைந்த இளவரசி, வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இளவரசி உயிரிழந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அப்போது, இளவரசி தற்கொலைக்கு காரணமான, 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

அங்கு வந்த நாமக்கல் போலீஸ் டி.எஸ்.பி. தனராசு மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News