ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையின் படிக்கட்டுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மூலிகைகள் அடங்கிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க வருவது வழக்கம். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி நடக்கவிருக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. ஆகையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று கொல்லிமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பினர்.