ராமாபுரம் கிராமசபை கூட்டம்

ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

Update: 2023-08-16 11:51 GMT

கிராமசபை கூட்டம்

மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி, கொசவம்பாளையம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி, கொசவம்பாளையம் பகுதியில் சுதந்திர தினவிழாவை ஒட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டார். ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகமணிகண்டன், மலர்விழி கிராம நிர்வாக அலுவலர் நித்தியா, மின்வாரிய மோர்பாளையம் உதவி பொறியாளர் சுதர்சனன், மல்லசமுத்திரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயபிரபா, மல்லசமுத்திரம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் யுவராஜ், ஊராட்சி செயலாளர் தங்கமணி, முன்னாள் தலைவர் தர்மலிங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொசவம்பாளையம் பகுதியில் மின் விளக்குகள் எரிவதில்லை எனவும், தண்ணீர் மோட்டார் வேலை செய்யவில்லை எனவும், குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேண்டும் எனவும், இருக்கும் நீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். விவசாயம் தொடர்பான கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுவதில்லை எனவும், பெயருக்கு கூட்டம் நடத்தி விட்டு நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து கையெழுத்து வாங்கி அனுப்புவதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News