தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி

இராஜேஸ்குமார் எம்.பி, மாவட்ட ஆட்சியர் ச.உமா துவக்கி வைத்தனர்

Update: 2023-07-18 10:38 GMT

நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் முன்னிலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்து, குளக்கரை திடலில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணாவால் 1967 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 30.10.2021 அன்று தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா, பெயர் சூட்டிய 18.07.967 ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து, ஆண்டுதோறும் சூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி நாமக்கல் நகராட்சி தெற்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், நாமக்கல் நகராட்சி குளக்கரை திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 2 மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.20,000, இரண்டாம் பரிசாக 2 மாணாக்கர்களுக்கு ரூ.7,000 வீதம் மொத்தம் ரூ.14,000, மூன்றாம் பரிசாக 2 மாணாக்கர்களுக்கு ரூ.5,000/- வீதம் மொத்தம் ரூ.10,000 என மொத்தம் 6 மாணாக்கர்களுக்கு ரூ.44,000 மதிப்பில் காசோலைகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் எஸ்.பூபதி, நகர்மன்ற உறுப்பினர் அ.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜோதி நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) த.வடிவேல், மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News