காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நதிகளுக்கு புத்துயிரூட்ட மரம் நடும் விழா

Update: 2023-09-04 05:02 GMT

மரம் நடும் விழா

நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தில் நாமக்கல் அருகே காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் பிறந்த நாளான செப். 3 ம் தேதி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகத்தில் 36 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 132 விவசாய நிலங்களில் 2,27,567 டிம்பர் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இளநகர் கிராமத்தில் விவசாயி செந்தில்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 3,000 விலை உயர்ந்த டிம்பர் மரங்களான செம்மரம், சந்தனம், மகாகனி உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதுபோன்று நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 7,500 மரக்கன்றுகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.

நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2,41,82,968 மரங்கள் நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2023) தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34,14,079 மரங்கள் நடப்பட்டுள்ளது.

ஈஷா மூலம் தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க 20 வகையான டிம்பர் மரங்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இம்மரங்களை விவசாய நிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும் நீண்ட காலத்திற்கு வளரும் மரங்களினுள் ஊடுபயிர் செய்து அதன் மூலமாகவும் வருமானம் பெறும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு காவேரி கூக்குரல் வழங்கி வருகிறது. சமவெளியில் வளரக்கூடிய கரிமுண்டா ரக மிளகு சாகுபடி மூலம் எண்ணற்ற விவசாயிகள் தொடர் வருமானம் பெற்று வருகின்றனர்.

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காக காவேரி கூக்குரல் சார்பாக தமிழம் முழுவதும் களப்பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று, மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல், மரநடவு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த ஆலோசனைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகளில் விவசாயிகளுக்காக குறைந்த விலையில் வெறும் ஒரு கன்று ரூ. 3 வீதம் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது. மேலும் வரும் மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது. நாற்றுகள் தேவைக்கும் இலவச ஆலோசனைகளுக்கும் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது காவேரி கூக்குரல் பொது எண் 80009 80009 மூலம் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News