இனி வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை!

கூட்டுறவு துறை சார்பில், 'நகரும் கூட்டுறவு வங்கி' !

Update: 2023-07-10 07:10 GMT

அனைவருக்கும் வங்கி சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், 'நகரும் கூட்டுறவு வங்கி' என்ற பெயரில், வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை அளிக்கும் வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4,453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பயிர்க் கடன், நகைக் கடன் உட்பட, 17 வகை கடன்கள் வழங்கப்படுகின்றன.


தனியாருக்கு இணையாக, இணையதள வங்கி சேவை உள்ளிட்ட, 'டிஜிட்டல்' சேவைகள், கூட்டுறவு வங்கிகளிலும் கிடைக்கின்றன.

கிராமங்கள், மலைப் பகுதிகளில் வசிப்போருக்கு வங்கி கணக்கு இருந்தாலும், ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கவும், 'டிபாசிட்' செய்யவும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது.

இதற்காக, வீட்டில் இருந்து அதிக துாரம் செல்ல வேண்டியுள்ளதால், பலர் சிரமப்படுகின்றனர்.

எனவே, வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை கிடைக்க, தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், 32 வாகனங்கள் வாயிலாக, நகரும் கூட்டுறவு வங்கி சேவை துவங்கப்பட்டு உள்ளது.

அந்த வாகனத்தில், சிறிய ஏ.டி.எம்., சாதனம் இருக்கும்.

வீட்டிற்கு அருகிலேயே வரும் அந்த வாகனத்தில் உள்ள ஊழியர், ஏ.டி.எம்.,மில் வாடிக்கையாளர்களின் விரல் ரேகையை பதிவு செய்து, 'ஆதார்' எண் சரிபார்ப்பின் வாயிலாக பணம் வழங்குவார்.

அதேபோல், வங்கி கணக்கிலும் பணம் செலுத்தலாம்.

Tags:    

Similar News