பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் அழகியநாச்சியம்மன் கோயில் மண்டகப்படி விழாவையொட்டி அபிராமி அந்தாதி பாராயணம் மற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி கடந்த 4- ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் வீதியலா நடைபெற்று வருகிறது. இதில், 5-ஆம் நாள் மண்டகப்படி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை அழகியநாச்சியம்மன் சோழீஸ்வரர் கோயிலில் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வர கோயில் முற்றோதல் குழுவினரால் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெற்றது. அதையடுத்து பெண்கள் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். தொடர்ந்து இரவு அழகியநாச்சியம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க வீதியுலாவாகஅழகியநாச்சியம்மன் கோயில் வந்தடைந்தார். முன்னதாக சோழீஸ்வரர் முற்றோதல் குழுவினரால் தேவாரப் பாடல்கள் ஓதப்பட்டன.