உலக எழுத்தறிவு தினம் கொண்டாட்டம்

குமாரபாளைத்தில் மாணவ மாணவியருடன் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-09-09 10:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் வேதாந்தபுரம் பகுதியில் மாணவ மாணவியருடன் உலக எழுத்தறிவு தினம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாணவிகளுக்கு எழுத்துப் போட்டி வைக்கப்பட்டு நன்றாக எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகங்களும், பயிற்சி நோட்டுகளும் வழங்கப்பட்டன. பிரகாஷ் பேசியதாவது: மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன. இதையடுத்து, 1965ம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. இதையடுத்து, 1966ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி நடத்திய யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுவில், எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் தீனா, பால்ராஜ், ராமகிருஷ்ணன், சித்ரா, ஜமுனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News