கண்ணமங்கலம் அருகே பயங்கரம்

கொளத்தூர் ஏரியில் பெண் கழுத்து அறுத்து கொலை எஸ்பி நேரில் விசாரணை

Update: 2024-09-19 23:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செப்.20: ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கொளத்தூர் ஏரியில் நேற்று பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணமங்கலம் அருகே சுமார் ஆயிரம் ஏக்கரில் பிரமாண்டமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆங்காங்கே குட்டைகளில் நீர் தேங்கியும், புதர்கள் மண்டியும் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை விவசாயிகள் ஆடு, மாடுகளை ஏரியில் மேய்சலுக்கு ஓட்டி சென்றுள்ளனர். அப்போது ஒரு புதர் அருகே கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பெண் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைது, உடனடியாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மாகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். திருவண்ணாமலையிலிருந்து வந்த மோப்பநாய் வீரா சிறிது தூரம் சென்று யாரையும் பிடிக்காமல் நின்று விட்டது. பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவண்ணாமலை எஸ்பி பிரபாகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கொளத்தூர் மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண்ணிடம் ஆவடியிலிருந்து பூந்தமல்லி வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது. அவர் அணிந்திருந்த கண்ணாடி சுங்குவார் சத்திரத்தில் வாங்கியது அந்த கண்ணாடி கவரின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை வைத்து விசாரணையை தீவிரபடுத்திய போலீசார், கண்ணாடி கடைக்காரரை தொடர்பு கொண்டு இறந்த பெண் ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்த அலுமேலு (50) என கண்டறிந்தனர். மேலும், இறந்த பெண் பவுர்ணமி முதல் கண்ணமங்கலம், புதுப்பேட்டை, கொளத்தூர் பகுதியில் இரண்டு நாட்களாக ஒரு சாமியாருடன் சுற்றிக்கொண்டிருந்துள்ளதாகவும், இறப்பதற்கு முதல்நாள் மாலை ஏரிக்கரை அருகே அவர்கள் இருவரையும் பார்த்ததாகவும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் இருந்த நபர் யார், கொலைக்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏரியில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News