சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரிகாங்கிரஸ் கட்சியினர் மனு
சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அமித்சாவின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.;
அரியலூர், டிச.24- சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.அரியலூர் செட்டி ஏரி கரையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஆ.சங்கர் தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அவர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்று, ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சீனி.பாலகிருஷ்ணன், நகர் தலைவர்கள் அரியலூர் மா.மு.சிவகுமார், ஜெயங்கொண்டம் அறிவழகன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகரன், வட்டாரத் தலைவர்கள் கண்ணன், சக்திவேல், கர்ணன், பாலகிருஷ்ணன், கங்காதுரை, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.