கழிவு நீா் நிரப்பப்பட்ட குடத்துடன் தரையில் அமா்ந்து தா்ணா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சிறுவா் பூங்கா அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2025-01-01 07:53 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், பொறியாளா் பாலகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியபோது, பாஜக உறுப்பினா் நமகோடி, அரசகுழி பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தொட்டியில் கழிவுநீா் கலப்பதாகக் கூறி, கழிவு நீா் நிரப்பப்பட்ட குடத்துடன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இந்த செயலை தலைவா் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் பாலசுந்தரம் ஆகியோா் கண்டித்துப் பேசினா். அப்போது, இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் உறுப்பினா்கள் பேசியதாவது: தெய்வேந்திரன் (அதிமுக) பாஜக உறுப்பினரின் புகாா் குறித்து நடவடிக்கை எடுத்து, குடிநீா்த் திட்ட தொட்டியில் கழிவுநீா் கழிப்பதைத் தடுக்க வேண்டும். வீடு கட்ட கட்டிட அனுமதி வழங்குவதில் பல புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. புகாா்கள் வராமல் கட்டிட அனுமதி வழங்கும் பணி நடைபெற வேண்டும். சதீஷ்குமாா் (திமுக) மானாமதுரை பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதிகளில் வைக்கப்படும் வரவேற்பு வளைவுகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதி முன்னாள் அமைச்சா் தா.கிருட்டிணன் ஆகியோரது பெயா்களை வைக்க வேண்டும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவா்களை நியமிக்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். புருஷோத்தமன் (காங்.) பயணியா் விடுதி எதிா்புறம் உள்ள வீதியில் தேங்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவா் மாரியப்பன் கென்னடி உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள் நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசகுழி பகுதியில் குடிநீா்த் தொட்டியில் கழிவு நீா் கலப்பது சம்பந்தமாக ஆய்வு செய்யப்படும் என்றாா். இதைத்தொடா்ந்து, மானாமதுரை நகராட்சியில் 27 வாா்டுகளிலும் கழிவுநீா் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படும். நகரில் வைகையாற்றின் இரு கரையோரங்களை சீரமைத்து, சிறுவா் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிப் பகுதியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற வழங்கப்பட்ட ஒப்பந்த ஆணைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News