நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறு கருத்து - பா.ஜ.க நிர்வாகி மீது சிவகங்கையில் புகார்
சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், நவாஸ்கனி எம்.பி குறித்து அவதூறாக பேசுவதாக பா.ஜ.க தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.;
சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் கலிலுர் ரகுமான் தலைமையில், ஜமாத் நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி அஸீஸ் ராவத்தை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது புகார் மனு அளித்தனர். அதில் சமீப காலமாக இனவாதத்தைத் தூண்டும் வகையில் இப்ராஹிம் பேசி வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவருமான நவாஸ் கனி மீது அவதூறு பரப்பும் விதமாகவும் கொச்சையாக பேட்டி கொடுத்ததை கண்டித்தும், அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.