தனியார் நிதி நிறுவன ஊழியரை அடித்துக் கொன்று எரித்த கணவன் மனைவி கைது உறவினர்கள் தலைமறைவு
ஜெயங்கொண்டம் அருகே தனியா நிதி நிறுவன ஊழியரை அடித்து கொலை செய்து உடலை டீசலை ஊற்றி எரித்த கணவன் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு கணவன் மனைவியை தா.பழூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்;
அரியலூர், மார்ச்.3- ஜெயங்கொண்டம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், தனியார் நிதி நிறுவன ஊழியரை அடித்து கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமறைவான இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூர் மேலவீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவா (30), இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே உள்ள கோடாலி பகுதிக்கு வசூல் செய்வதற்காக சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கோடாலி கிராமம் அருகில் உள்ள செங்கால் ஓடை அருகே நேற்று முன்தினம் மார்ச் 2ஆம் தேதி காலை அங்கு ஆடு மாடு மேய்க்கும் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு பாதி எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி தா.பழூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் பின்னர் அங்கு வந்த தா பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸ் படை. சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையில் இறந்து கிடந்தது யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். சம்பவம் குறித்த தகவல் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிவாவின் உறவினர்கள் இறந்து கிடந்தது சிவாதான் என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தா பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகேஷ் (35) மற்றும் அவரது மனைவி விமலா (32) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிவா பணிபுரியும் நிதி நிறுவனத்தில் மகேஷ் தனது வேறொரு நண்பர் மூலமாக நிதி உதவி பெற்று கார் வாங்கியுள்ளார். அந்த காருக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை சிவா செலுத்தி வந்துள்ளார். இரண்டு தவணைகள் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு தவணைத் தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணைத் தொகை செலுத்தாததால் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவாவிடம் நிதி நிறுவனம் சார்பில் அவர்களிடம் வசூல் செய்யும் பொறுப்பை கொடுத்துள்ளனர். தொடர்ந்து நிதி நிறுவனம் சார்பில் தொகையை வசூல் செய்வதற்காக மகேஷிடம் பேசி வந்துள்ளார். ஆனால் அதற்கான தொகையை மகேஷ் கட்ட வில்லை. பின்னர் அவரது வீட்டிற்குச் சென்ற சிவா, தவணத் தொகையை கட்டி முடிக்க வேண்டும் என மகேஷிடம் சிவா நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து டார்ச்சரை சந்தித்து வந்து இதில் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ், நிதி நிறுவன ஊழியர் சிவாவை தீர்த்து கட்டுவதற்கு திட்டம் தீட்டினார். இதற்கு உடந்தையாக அவரது மனைவியும், உறவினர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி இரவு மகேஷ், சிவாவுக்கு செல்போன் மூலம் அழைப்பு கொடுத்து வீட்டிற்கு வந்து தவணை தொகையை வசூல் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதை நம்பி இரவு 8 மணி அளவில் மகேஷ் வீட்டிற்கு சென்ற சிவா தொகையை பெறுவதற்காக வீட்டின் முன்பு காத்திருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மகேஷ் பின்பக்கமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிவாவின் பின்பக்க தலையில் ஓங்கி கட்டையால் அடித்து தாக்குகிறார். இதில் நிலைகுலைந்த மகேஷ் தடுமாறி விழுந்தவுடன் அவரது மனைவி விமலா வீட்டிலிருந்து கடப்பாறையை எடுத்து வந்து அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மகேஷின் அக்கா மகன் ராஜேஷிடம் கொடுத்துள்ளார். மகேஷ் அக்காவின் 17 வயதுடைய இன்னொரு மகன் சிவாவை இறுக்கிப்பிடித்துக் கொண்டுள்ளார். அப்போது ராஜேஷ் கடப்பாரையால் தொடர்ந்து மகேஷை அடித்து தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கால்களில் கயிற்றைக் கட்டி சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து செங்கால் ஓடை பகுதிக்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனை ஓலை மற்றும் டீசல் ஆகியவற்றை பயன்படுத்தி சிவாவை யாருக்கும் தெரியாமல் அதிகாலை நேரத்தில் எரித்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் மகேஷ் மற்றும் விமலா தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மகேஷ் மற்றும் விமலாவை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இவர்களோடு இணைந்து சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான 17 வயது சிறுவனையும், ராஜேஷையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட குற்றத்திற்காக பணம் தருகிறேன் வா என்று வரவழைத்து கணவன், மனைவி அவர்களது உறவினர்களோடு சேர்ந்து நிதி நிறுவன ஊழியரை அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.