லாரியை கடத்தியவர் கைது
சத்தியமங்கலம் அருகே பரபரப்பு சம்பவம் மது போதையில் லாரியை திருடி ஒட்டி சென்ற வாலிபர் சோதனை சாவடியில் சிக்கினார்;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி லாரியில் கரும்பு லோடுகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று லோடுகளை இறக்கிவிட்டு காலையில் வெளிப்பகுதியில் லாரியை நிறுத்தி உள்ளார். பின்னர் சுப்பிரமணி வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரி மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று புளியம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட டனா புதூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் இருந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனடியாக அந்த நபரை விசாரணைக்காக லாரியுடன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில் அந்த நபர் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்த முருகேசன் (28) என்பதும் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்தபோது லாரியை திருடி ஓட்டி சென்றதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் முருகேசனை கைது செய்தனர்.