பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உரிய உரிமம் இல்லாத உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எப்படி கிடைத்தது. அவர் எங்கிருந்து வாங்கினார் என பெல் போலீசார் விசாரணை;
திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது . இந்த நிறுவனத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆலை நிர்வாகம் குடியிருப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.இந்நிலையில் எஸ்எஸ்டிபி பிரிவில் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசபுரம் 8வது தெருவை சேர்ந்த சண்முகம் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல பணிக்கு சென்று இருந்தார். ஆனால் மாலை பணி முடிந்து வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது எடுக்கப்படவில்லை.இதனை தொடர்ந்து பெல் நிறுவன அலுவலகத்திற்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.அதன் அடிப்படையில் அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்த பொழுது அலுவலக கதவு உள்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவைத் தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை.இதனால், சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.அப்போது சண்முகம் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சடலமாக கிடந்தது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகத்திற்கு பார்வதி என்ற மனைவியும் அவர் பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.மேலும், அவருக்கு ஒரு மகள் உள்ளார் அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருவதும், சண்முகத்திற்கு இதய நோய் பிரச்சனை இருந்து வருவதும் அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது.மேலும் அவர் சுட்டுக்கொண்டு இருந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெல் தொழிற்சாலை பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.