திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்.
திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி வழியாக சென்னை கடற்கரை வரையும், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.;

திருவண்ணாமலையில் மாசி மாத பெளா்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். மாசி மாத பெளா்ணமி: இந்த நிலையில், மாசி மாத பெளா்ணமி வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை 11.40 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) பிற்பகல் 12.57 மணிக்கு முடிகிறது. பக்தா்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். மாலை 5 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இரவு 8 மணிக்குப் பிறகு கிரிவல பக்தா்கள் கூட்டம் அதிகரித்தது.தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில், திருநோ் அண்ணாமலையாா் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரம்: அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவதற்காக ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் தெரிவித்தனா். சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: கிரிவல பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன. இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி வழியாக சென்னை கடற்கரை வரையும், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.