தூய்மை பணியாளர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
நோட்டீஸ்;

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளர் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் நலன் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், 22 ஆண்டுகளாக பணியாற்றும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் குடியிருந்த நிலையில், அக்குடியிருப்புகளும் இடிக்கப்பட்டு விட்டன. இதனால், மாத வாடகை ரூ. 4 ஆயிரம் செலுத்தும் நிலையில், மாதாந்திர ஊதியம் ரூ. 15 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்கு சிரமமாக உள்ளது என முறையிட்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணனிடம் ஆணையத் தலைவர் விசாரித்தபோது, தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ. 624 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 590 மட்டுமே வழங்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, இப்பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருமாறு தொழிலாளர் துறைக்கு ஆணையத் தலைவர் உத்தரவிட்டார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு முழு ஊதியத்தை உரிய காலத்தில் வழங்குவதை உள்ளாட்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் ஆணையத் தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.