அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து மாவட்ட ஆட்சியர்.
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை அறிந்து கொள்ள பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசித்துக் காண்பிக்க கூறி கேட்டறிந்தார்.;
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு இன்று கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டினை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறித்து அறிய பாடபுத்தகங்களில் சில பாடங்களை வாசித்து காட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதன் அடிப்படையில் மாணவர்கள் வாசித்து காட்டினார்கள். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அறிய உணவினை ருசித்து பார்த்தார்.