தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் செல்போன் டவர் இன்ஜினியரின் பைக்கை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த தரணி என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (37). தனியார் செல்போன் டவர் இன்ஜினியர். இவர் கடந்த 13 ஆம் தேதி அன்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆரோக்கிய நகர் பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஞ்சித் குமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் ரஞ்சித் குமாரின் பைக்கை திருடியது மாதா கோட்டை ரோடு மனிஷா நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பிரவீன் குமார் (43) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீன் குமாரை கைது செய்து அவரிடமிருந்து ரஞ்சித் குமாரின் பைக்கை காவல்துறையினர் மீட்டனர்.