மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் குடவாசல் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் 2025 மார்ச் மாதத்திற்கான முகாம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 19-03-2025 காலை 9.00 மணி முதல் 20-03-2025 காலை 9.00 மணி வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக குடவாசல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளி விவரப்பதிவேடுகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்து, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கட்டு கட்டும் அறை, சித்த மருத்துவ பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.