ஓட்டப்பிடாரத்தில் அரசுகலைக் கல்லூரிக்கு தற்காலிக இடம் தேர்வு
ஓட்டப்பிடாரத்தில் தற்காலிகமாக அரசு கலைக் கல்லூரி செயல்படுத்தப்பட உள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்;

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இன்று (02.04.2025) புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், தற்காலிகமாக அரசு கலைக் கல்லூரி செயல்படுத்தப்படவுள்ள இடத்தினையும் மற்றும் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பான இடத்தேர்வினையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் வட்டம் அரைக்குளம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், அதேபோல் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஓட்டப்பிடாரம் வட்டம் குலசேகரநல்லூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி தற்காலிகமாக செயல்படுத்தப்படவுள்ள இடத்தினையும், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வாட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் (வ.ஊ), சித்தார்த்தன் (கி.ஊ) ஆகியோர் உடனிருந்தனர்.