அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு
மணல்மேடு அருகே 26 அடி உயர ஸ்ரீவராகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறிய கோயில் பூசாரி, திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் :-;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் ஸ்ரீ ராஜபத்ரகாளியம்மன் சந்தன கருப்பசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் 26 அடி உயரத்தில் ஸ்ரீ வராகி அம்மனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 26 அடி உயர வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் பூசாரி வினோத்ராஜா என்பவர் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.